ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா 3ஆம் அலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3 அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் கமுதி பேருந்து நிலையம் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், தனிமனித இடைவெளி குறித்தும் எடுத்து கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள பஜார்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனாவின் தீவிரம் குறித்து அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை தங்கியுள்ளார். மேலும் மண்டல துணை தாசில்தார் கோமதி, வருவாய் ஆய்வாளர் வேலாயுதம், சித்த மருந்தாளுநர் அருள், சுகாதார துறை ஆய்வாளர்கள் நாகலிங்கம், சதீஷ்குமார், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.