கள்ளத்துப்பாக்கி உடன் வனப் பகுதிக்குச் சென்று வேட்டையாட முயன்ற நபர்களை வனத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்தில் பாலப்பட்டி வேடர் காலனி பகுதியில் கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி போன்றவற்றை கொண்டு ஒரு கும்பல் மான், முயல் போன்றவற்றை வேட்டையாட செல்வதாக சிறுமுகை வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் நவீன், சத்யராஜ் ஆகியோர் வேட்டையில் ஈடுபட்ட 4 நபர்களை பிடித்தனர்.. அவர்களிடமிருந்து ஒரு கள்ளத்துப்பாக்கி, சுருக்கு கம்பி போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்பின் அவர்கள் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வனக்காப்பாளர்கள் சித்தன், பாபு, ஆனந்தி, ராஜலட்சுமி, முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. இது பற்றிய விசாரணையில், வேட்டையாட சென்ற 4 நபர்களின் பெயர்கள் குமார், சுரேஷ், செல்வராஜ், மனோஜ் என்பதும், மானை வேட்டையாட சென்று அங்கு மான் கிடைக்காமல் வனப்பகுதியிலிருந்து வெளியே கிளம்பியதும் தெரியவந்தது.
மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி குற்றவாளிகளிடமிருந்த உரிமம் பெறாத துப்பாக்கியை காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.. மேலும் அவர்களிடமிருந்து தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 40 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.