‘செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது..
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், நோய் கட்டுப்பாடு பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுள்ளதாகவும், 4ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளில், செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகள் 100 பேருடன் நடத்தலாம். செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி கலையரங்கம், திரையரங்குகள் செயல்படும்.
மேலும் நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர பிற பகுதிகளில் உள்ள 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கல்வி தொடர்பான ஆலோசனைகளை பெற செப் 21 முதல் பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலை பெற்று சொந்த விருப்பத்தின் பேரில் ஆசிரியர்களை சந்தித்து வழிகாட்டுதல் பெற பள்ளிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. ஆனால் கட்டாயமல்ல.. அதேபோல செப்டம்பர் 21 க்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்களை பள்ளிக்கு அழைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் பயிற்சி மையங்கள் திறப்பதற்கான தடை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.. இதனால் 30ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது..