இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்பவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனால் சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் அங்கிருந்து வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக இறந்தார். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபஸ்ரீ கனடா செல்வதற்காக தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுபஸ்ரீ மறைவுக்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.