தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
6 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை இருந்தாலும் 6 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 42 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து அனல் காற்று வீசக்கூடும்.
எனவே அடுத்துவரும் 2 தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37டிகிரி செல்ஸியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியாசாகவும் பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.