திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பாக, பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கிய கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்து குடியுரிமைச் சட்டத்தின் ஆபத்தை விளக்கி அதற்கு எதிராக கையெழுத்து வாங்கி வருகிறார்.
இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் மு.க. ஸ்டாலின், மணமகன், மணமகளுக்கு சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். அப்போது மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம், கையெழுத்து இயக்கத்திற்கான நோக்கத்தை விளக்கி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்தைப் பெற்றார்.
அதேபோல், சென்னை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய ஸ்டாலின், அவர்களிடமும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் பெற்றார். இதில், கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.