Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ரஷித் கான் தான் கேப்டன்… ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஆப்கான் கிரிக்கெட் வாரியம்  ரஷித் கானை  3 வகையான கிரிக்கெட்டுகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளது. 

உலக கோப்பையில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 ஆட்டங்களில் விளையாடியது. இதில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சில ஆட்டங்களில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் இறுதியில் தோல்வியே மிஞ்சியது.

இந்நிலையில், ஒருநாள், டெஸ்ட் மற்றும்  டி 20 ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை ஆப்கான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக நியமித்துள்ளது. முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே  ஒருநாள் போட்டிக்கு குல்படின் நைப், டெஸ்ட் போட்டிக்கு ரஹ்மத் ஷா, டி20 போட்டிக்கு ரஷித் கான் கேப்டனாக இருந்து வந்தனர்.

ரஷித் கான் தலைமையிலான ஆப்கான் அணி வருகின்ற செப்டம்பரில் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் மோத உள்ளது. இதையடுத்து நவம்பர் 5-ம் தேதி தொடங்கி டிசம்பர் 1-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது. 20 வயதுடைய ரஷித் கான் இதுவரையில் 67 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளும், 38 டி-20 போட்டிகளில் 75 விக்கெட்டுகளும், இரண்டு டெஸ்ட் போட்டிகளால் 09 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |