புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த புயல் கரையைக் கடக்க துவங்கியதால் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பானி புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பானி புயல் கரையை கடந்து வருவதால் ஆந்திராவில் உள்ள இரண்டு துறைமுகங்களில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோன்று பீமுனிபட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், விசாகப்பட்டினம் மற்றும் கங்காவரம் துறைமுகங்களில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.