தலீபான்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா வர மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றினர். இதனையடுத்து தற்பொழுது ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலீபான்கள் அறிவித்துள்ளனர். இந்த இடைக்கால அரசை எந்த நாடுகளும் இதுவரை முறைப்படி அங்கீகாரம் செய்யவில்லை. இருப்பினும் ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தலீபான்களின் இடைக்கால அரசிற்கு தங்களது ஆதரவை அளிக்கின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்பொழுது நிலவும் சூழல், ஆட்சி செயல்பாடுகள் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய ரஷ்யாவின் தலைமையில் இன்று சர்வதேச கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சீனா, பாகிஸ்தான், இந்தியா போன்ற உலக நாடுகள் கலந்து கொள்கின்றனர். மேலும் தலீபான்கள் அமைப்பில் இருந்தும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ரஷ்யா நடத்தும் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரஷ்யா நடத்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்ளமாட்டோம். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக முன்னோக்கி நகர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.