தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கலக்கம் அறிவித்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான மூன்றாம் படை வீடு பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 31ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ஆம் தேதி நடக்கிறது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஜனவரி 28ஆம் தேதியை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த தினங்களில் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பில் வருகிற 25-ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக்கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து பழனிக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.