சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொம்மக்கோவில் காலனி பகுதியில் மாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஞானசேகரன் என்ற மகன் இருக்கின்றார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு சென்னிமலை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஞானசேகரன் சிறுமியை திருமணம் செய்ததை அறிந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கொம்மக்கோவில் பகுதிக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். இதனையடுத்து சிறுமியை அறச்சலூர் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல விடுதியில் தங்க வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு ஞானசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.