தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனையடுத்து ஜெயங்கொண்டான் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட தனியார் மட்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் ஆகியவைகள் செயல்பட்டு வருகின்றது. அப்பகுதியில் கடந்த 28ஆம் தேதி அன்று வங்கி மேலாளர் ஒருவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆடிட்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை நகராட்சி நிர்வாகத்தினர் 14 நாட்கள் வரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது. அது மட்டுமில்லாமல் பொதுமக்கள் உள்ளே இருந்து வெளியேயும், வெளியே இருந்து உள்ளேயும், செல்லாதபடி தடுப்புக் கட்டைகளை வைத்து அடைத்து இருந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் .மையங்கள் ஆகியவற்றிலும் கிருமிநாசினிகளை தெளித்தும் வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி ஏராளமான பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வங்கிகளின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த நகராட்சி ஆணையர் சுபாஷினி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், பொதுப் பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று அங்குள்ள பொதுமக்களிடம் இவ்வாறு கூட்டமாக இருந்தால் கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் உள்ளது என்று கூறி அவர்களுக்கு முக கவசம், கிருமிநாசினி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அப்புறப்படுத்தினர். மேலும் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு அப்பகுதியில் திடீரென கூட்டமாக கூடிய மக்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.