நேற்று கொலம்பியா அதிபர் பயணித்த ஹெலிகாப்டரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கொலம்பியாவின் தலைநகரான போகோடாவிலிருந்து வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கோகட்டா நகருக்கு அந்நாட்டின் அதிபர் இவான் டியூக் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது உள்துறை மந்திரி, நோர்டே டி சாண்டாண்டர் மாகாண கவர்னர், ராணுவ மந்திரி உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் கோகட்டா நகரில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் நேரத்தில் ஹெலிகாப்டரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து ஆறு முறை ஹெலிகாப்டரில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனால் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹெலிகாப்டரை விமானிகள் சாதுரியமாக செயல்பட்டு தரை இறக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் அதிபர் உட்பட அனைவரும் விமானிகளின் சாதுரிய செயலால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக எந்தவிதமான பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.