புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிக்க பாஜக அதிக காலம் எடுத்துக்கொள்வது, தமிழ்நாடு பாஜகவிலுள்ள உட்கட்சி பூசல் குறித்த யூகங்கள் வலுப்பெற உதவின. இருப்பினும் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் உறுதிசெய்யப்பட்டதாகவும், ஓரிரு நாள்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 5 மாதங்களுக்கு முன் தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். 5 மாதங்களுக்கு மேலாகியும், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சனிக்கிழமையன்று மத்திய பிரதேசம், சீக்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தலைவர்கள் அறிவிக்கப்பட்டபோதும், தமிழ்நாடு பாஜக தலைமை குறித்த அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.
“2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே உள்ளதால், தமிழ்நாடு பாஜகவுக்கு தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க நீண்ட கூட்டம் நடைபெற்றது. இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டிற்கான தலைவர் அறிவிக்கப்படுவார்.
பாஜக தேசிய செயளாலர் எச். ராஜா, தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நயினார் நகேந்திரன், மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி. முருகானந்தம், மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் புதிய தலைவருக்கான போட்டியில் உள்ளனர். இவர்களில் நயினார் நகேந்திரனும் கருப்பு முருகானந்துமும் தலைவர்களாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று பாஜகவின் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தலைவர் அறிவிப்பு குறித்து பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி கூறுகையில், “கட்சியில் தற்போது எந்தவொரு பிரச்னையும் இல்லை. தலைவர் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். ஏன் நாளைகூட தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம்” என்றார்.