தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.
சென்னையில் இன்று முதல் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகன ஓட்டுபவர்களிடம் ரு. 5 ஆயிரம் அபராதமும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ. 1000 அபராதமும், 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும்,சாலையில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி ரேஸில் ஈடுபடுவோருக்கு ரூ. 5 ஆயிரமும் இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களோடு பயணிப்பவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும். காரில் சீட்பெல்டு அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 1000 அபராதம் வசூலிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து செய்த பின்பு வாகனம் ஓட்டுவோரிடம் ரூ. 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும். இதனோடு போக்குவரத்து விதிமுறைகளுக்கான பொது அபராதத் தொகை ரூ. 100-ல் இருந்து ரூ. 500-ஆக உயர்த்தப்படுகிறது. சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறுவோருக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்படுகிறது.