Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : நின்ற மழை.! மீண்டும் தொடங்கிய போட்டி…. வெற்றிக்கு 85 ரன்கள் தேவை…. கட்டுப்படுத்துமா இந்தியா?

வங்கதேசத்துக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்..

இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி முதல் விளையாடி வருகிறது.. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 44 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 64 ரன்களும், கே.எல் ராகுல் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 50 ரன்கள் எடுத்தனர். மேலும் சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதை எடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணியின் துவக்க வீரர்களாக சாண்டோ மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினர். இதில் ஷாண்டோ பொறுமையாக ஆட தாஸ் அதிரடியில் மிரட்டினார். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே வங்கதேச அணி எடுத்திருந்தது. அதன் பின் அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரிகளை லிட்டன் தாஸ் விளாசினார்.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரில் புவனேஷ்வர் குமாரையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என விளாசி அதிரடியாக ஆடினார். அதன் பின் ஷமி வீசிய 6ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரி என அதிரடியாக விளாசி அரைசதம் அடித்தார். தாஸ் 26 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்சர்) 59 ரன்கள் எடுத்திருந்தார். மறுமுனையில் ஷாண்டோ 16 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்தார்.

இதையடுத்து 7 ஓவரில் வங்கதேச அணி 66 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் உள்ளது வங்கதேச அணி. இப்படி தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது. எனவே மழை நின்று போட்டி தொடங்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் மழை நின்ற நிலையில் மீண்டும் போட்டி தொடங்கியது. தற்போது போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 66 ரன்கள் எடுத்துள்ளதால் வெற்றிக்கு இன்னும் 9 ஓவரில் 85 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. தற்போது லிட்டன் தாஸ் மற்றும் சாண்டோ இருவரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |