டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 142 ரன்கள் குவித்தது. அதன்பிறகு 143 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இப்போட்டியில் 15-வது ஓவரை இலங்கை அணியில் வனிந்து ஹசரங்கா பந்துவீசினார் .இவர் வீசிய ஓவர் கடைசி பந்தில் மார்க்ரம் போல்டாகி வெளியேறினார் .இதைதொடர்ந்து 18-வது ஓவரில் மீண்டும் ஹசரங்கா பந்து வீசினார் .இதில் முதல் பந்தில் கேப்டன் பவுமா கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க , அடுத்ததாக பிரெடோரியஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார் .
இதன்மூலம் வனிந்து ஹசரங்கா ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதோடு டி20 உலக கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது பவுலர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பதாக நடப்பு டி20 உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி வீரர் கர்ட்டிஸ் கேம்பர் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி இருந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.