கென்யாவில் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து தப்பிச்சென்ற 10க்கும் மேற்பட்டோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி உஹீரு கென்யாட்டா (Uhuru Kenyatta) தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காட்டு தீயை போல வேகமாக பரவிவரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து தங்களது சொந்த நாட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருக்கும் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் தப்பி ஓடிவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன..
தனிமைப்படுத்தப்பட்ட மையம் ஒன்றில் இருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலானதை தொடர்ந்து சில மணிநேரத்திலேயே ஜனாதிபதி கென்யாட்டா நாட்டு மக்களிடம் புதன்கிழமை (நேற்று) காலை உரையாற்றினார்.
அப்போது அவர், தப்பி சென்ற அனைவரின் அடையாளங்களும் அரசாங்கத்துக்கு தெரியும் என்றும், ஆகவே மீண்டும் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் கூறினார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது..