எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விடக் குறையும் என தனியார் வானிலை ஆய்வு மையமான Skymet Weather Services தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக இந்தியாவுக்கு அதிக அளவில் மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவ்வருடம் மழையின் அளவு சராசரி அளவிலிருந்து குறையும் என்று தனியார் ஆராய்ச்சி மையமான (SKYMET) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப்பொழிவின் அளவு வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்றும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சராசரியாக மழைப் பொழிவு இருக்கக் கூடும் என SKYMET தலைமை நிர்வாக அதிகாரி ஜத்தின் சிங் தெரிவித்துள்ளார். சராசரியாக 97 சதவிதமாக பெய்து வரும் பருவமழை, சுமார் 93 சதவிகிதமாக குறைந்து காணப்படும் என அந்நிறுவனம்தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த வருடம் சராசரி அளவை விட குறைந்த அளவாக இருக்க காரணம் “எல் நினோ” என்று அழைக்கப்படும் பருவநிலை மாற்றம் தான் என SKYMET நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடத்தில் தென்மேற்கு பருவமழையின் முழு காலங்களில் சராசரியாக சுமார் 93 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், பசிபிக் பெருங்கடலில் சராசரியை விட அதிகளவிலான வெப்பநிலை காணப்படுவதால் “எல் நினோ” உருவாக வாய்ப்புள்ளதாகவும் SKYMET தெரிவித்துள்ளது. மேலும் ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் ஆந்திரா மாநிலத்தின் கடற்கரை பகுதிகளில் சராசரியாக பெய்யக்கூடிய மழைப்பொழிவு இருக்கும் எனவும் SKYMET கணித்து கூறியுள்ளது. இதனால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு, பயிர் விளைச்சலுக்கான தண்ணீர் பற்றாக் குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.