பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில்,
விவசாய பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் சில திருத்தம் கொண்டு வரப்படும், வெங்காயம் பருப்பு வகைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன. தானியம், பருப்பு, வெங்காயம், உருளை, சில எண்ணெய் வகைகளும் இவற்றில் அடங்கும் என கூறியுள்ளார். மேலும் வெங்காயம், தக்காளி, பருப்புகள், எண்ணெய் வகைகள் போன்றவற்றின் விலைகளில் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு வட்டி மானிய திட்டத்தின் மூலம் ரூ.5,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. விளைபொருள் வினியோக சந்தையை கட்டமைக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைபயிரை மையமாக கொண்டு உணவு நிறுவன பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் சீர்திருத்தங்களை அமல்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்.
தமிழகத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.6400 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.18,700 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ரூ.74,300 கோடிக்கு உணவு தானியம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயப் பொருட்களை விளம்பரப்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.