சோமாலியாவில் உள்ள சொகுசு ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷாபாப் இயக்கத்தினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தலைநகர் மொகடிசுவின் லிடோ கடற்கரை பகுதியில் அமைந்துள்ள உயர்தர சொகுசு ஓட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கு இருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சி அளித்துள்ளது. அப்பகுதியில் இருந்த மக்கள் பயத்தில் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், ஹோட்டலில் நுழைந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது 4 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் ஹோட்டலை பாதுகாப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்தத் துப்பாக்கி சண்டையில் அப்பாவி மக்கள் பத்து பேர் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி என மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதல் மேற்கொண்ட அல் ஷாபாப் இயக்கத்தினர் 5 பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.