மகாராஷ்டிரா மாநிலம் சீரடியிலுள்ள உலக பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு பல நாடுகளிலிருந்தும் வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த கோயிலில் பல வேண்டுதல் மற்றும் கோரிக்கைகளை வைக்கும் பக்தர்கள் அது நிறைவேறியதும் தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். மேலும் சிலர் தங்கத்தால் ஆன தலைப்பாகையினை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
அதன்படி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பக்தர் கனாரி சுபாரி பட்டேல் என்பவர் வைரக்கற்கள் பதித்த தங்கத்தால் செய்யப்பட்ட கிரீடத்தை சாய்பாபா கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். 368 கிராம் எடைக்கொண்ட அந்த கிரீடம் ஏறத்தாழ 28 லட்ச ரூபாய் மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காண்போரின் கண்களை கொள்ளையடிக்கும் வகையில் அந்த கிரீடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் தொழில் அதிபர் கனாரி சுபாரி பட்டேல், கோவில் நிர்வாகத்தினரிடம் வைரக்கற்கள் பதித்த கிரீடத்தை வழங்கினார்.