மலையாள சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்தவர் ஜெய்சன் ஜோசப் (44). இவர் லவகுசா, ஜமுனா பியாரி போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள பனம்பில்லி பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், 2 நாட்களாக ஜெய்சன் ஜோசப்பை உறவினர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஜெய்சன் உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரை வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் ஜெய்சனின் வீட்டிற்கு சென்று அவர்கள் பார்த்த போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அடுக்குமாடி குடியிருப்பு தாரர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜெய்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அதன் பிறகு ஜெய்சனின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தயாரிப்பாளர் ஜெய்சனின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.