லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பிரிட்டன் சேன்சலர் ரவி சுனக் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் செவிலியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக எந்த விஷயமும் இடம்பெறவில்லை என்று குரல் கொடுத்துள்ளார்.
இலங்கையில் பிறந்த ரபேக்கா சின்ன ராஜா என்ற 22 வயது பெண் லண்டனில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியிலும் கலந்துகொள்ள இருக்கிறார். “நான் அழகி போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் குழந்தைகளுக்காகவும் செவிலியர்களுக்காகவும் நிச்சயம் குரல் கொடுப்பேன்” என்று ரபேக்கா கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரிட்டன் சேன்சலர் வெளியிட்டிருக்கும் பட்ஜெட்டில் செவிலியர்களின் ஊதியம் தொடர்பாக எந்த விஷயமும் குறிப்பிடப்படவில்லை என்று ரபேக்கா கூறியுள்ளார். மேலும் , “எங்களின் கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் பிரிட்டன் பட்ஜெட் எங்களை கைவிட்டு விட்டது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது.
கொரோனா காலத்தில் நாங்கள் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உயிரை காப்பாற்ற கடுமையாக உழைத்து வந்தோம். செவிலியர் தொழில் என்பது நான் மிகவும் நேசிக்கும் தொழில். அதற்காக பொது மக்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு கைதட்ட வேண்டும் என்று நான் கூறவில்லை. செவிலியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கினாலே போதும் ” என்று ரபேக்கா கூறியுள்ளார்.