ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, இன்று காலை 59 அடியாக உயர்ந்தது. மேலும் நீர் இருப்பு 6.9 DMCயாக உள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 5 கனஅடி நீர் என மொத்தம் 205 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.