கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு 41 நாட்கள் திறந்திருக்கும். கார்த்திகை 1 ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி மண்டல பூஜை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். கடந்த முறை கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிக அளவு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த முறை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஐயப்பனை தரிசிக்க ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் சிரமத்தை போக்கக்கூடிய வகையில் சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் நோக்கி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதனைப் போல செவ்வாய், வியாழன், மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.