திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய கும்பல் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி குளத்தில் அனுமதியின்றி டிராக்டர்களில் கிராவல் மணல் அள்ளுவதாக நேற்று முன்தினம் எரியோடு காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டர்களை அப்படியே நிறுத்திவிட்டு ஓடியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற போது, அந்த நபர்கள் பிடிபடாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதன் பின் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.