ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக தொழில் நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இவருடைய வாகனத்தின் டிரைவராக ஓம்சக்தி நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கார்த்திக் 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சரவணகுமாரும் அவருக்கு 2 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருந்துந்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் அவரது நண்பர்களை அழைத்துக்கொண்டு சரவணகுமாரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த பொருட்களை உடைத்து தகராறு செய்துள்ளனர். மேலும் சரவணகுமாரருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக நிர்வாகி கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.