சாகுபடி செய்த மக்காச்சோள பயிரை படைபுழு தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மலைப்பகுதியில் பாரதிபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, திகனாரை, சிக்கள்ளி, தலமலை, கேர்மாளம்,குளியாடா என 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்வது வழக்கமாக இருக்கிறது. அதன்படி சாரல் மழை காரணமாக இந்த வருடமும் விவசாயிகள் தங்களது நிலங்களில் மக்காச் சோளத்தை சாகுபடி செய்தனர். இதனையடுத்து 3 மாத கால பயிரான மக்காச்சோளம் தற்போது சிறிய அளவில் வளர்ந்துள்ளது.
இந்நிலையில் பயிர்களில் படைப்புழுகள் அதிகரித்து இழைகளை தின்று விடுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது சோளம் சாகுபடி செய்து தற்போது பயிர்களில் படைப் புழு அதிகரித்ததால் அது வளராமல் இருக்கிறது. இது கடந்த 5 வருடமாக மக்காச்சோள பயிர்களை தாக்கி வருவதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இவ்வாறு நோய் தாக்கி இருப்பதால் மகசூல் அதிக அளவில் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.