ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடை அறிவித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து, தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டுவருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர் பலிகளும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உலக நாடுகள், போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்க ரஷ்யா அழைத்தபோது, உக்ரைன் மறுத்துவிட்டது.
ரஷ்யா, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் சம்மதம் தெரிவித்து, தங்கள் குழுவை ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பொலாரசில் இருக்கும் கோமல் பகுதிக்கு அனுப்பியிருக்கிறது. உக்ரைன் குழுவினர், ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
உக்ரைன் தரப்பில், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், ரஷ்யபடைகள் நாட்டிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் நிபந்தனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தங்கள் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்ததால், இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட 36 நாடுகளின் விமானங்கள், தங்கள் வான்வெளியை பயன்படுத்த முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.