ஒரு நபர், இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி குறைக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவை தமிழகஅரசு குறைத்து அறிவித்து உள்ளது என தகவல் வெளியானது. தமிழகத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்க 4 வகையான ரேசன் அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன.
அதன்படி, பச்சைநிற அட்டை, வெள்ளை நிற அட்டை, காக்கி அட்டைநீல நிற அட்டை என வகைப்படுத்தப்பட்டது. தற்போது அனைத்தும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த வண்ண அட்டைகளுக்கு ஏற்ப ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி உள்பட ரேசன் பொருட்கள் வழங்கப்படுவது மாற்றம் ஏற்படும். இந்த நிலையில், தற்போது குடும்ப உறுப்பினர் படி வழங்கப்படும் அரிசியின் அளவை மாநில அரசு குறைத்து உத்தரவிட்டு உள்ளது என தகவல் வெளியானது.
அதன்படி ஒருநபர் அட்டைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அரிசி 12 கிலோவிலிருந்து 7கிலோவாக குறைக்கப்பட்டு உள்ளது. அதுபோல, இரண்டு நபர் அட்டைக்கு வழங்கப்பட்டு வந்த 16 கிலோ அரிசியை, 12 கிலோவாக குறைத்துள்ளது.இந்த தகவலால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும், ஏமாற்றமும் நிலவியது. இந்த நிலையில், இந்த தகவல் தவறானது என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.