ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் குவித்தது
2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 31 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர்.
விராட் கோலி 8 ரன்களில் பேகெஃரெண்டார்ப் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வசம் பிடிபட்டார். அதன் பிறகு டிவில்லியர்ஸ் களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடிய பார்த்திவ் பட்டேல் 28 (20) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து டீவில்லியர்ஸும், மொயின் அலியும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். அதன் பிறகு மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்கள் (5 சிக்ஸர், 1 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 0 ரன்னில் ஏமாற்றமளித்தார்.
அதன் பிறகு கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 75 ரன்கள் (4 சிக்ஸர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக மலிங்கா 4 விக்கெட்டுகளும், பேகெஃரெண்டார்ப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி மும்பை அணி களமிறங்க உள்ளது.