இ-பாஸ் கொண்டு வருபவர்கள் மட்டும்மே புதுச்சேரிக்குள் அனுமதி அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் இதுவரை 42 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் மட்டுமே அங்கு கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பதை தீவிரப்படுத்துவது குறித்த ஆட்சியர் அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க வேண்டாம் என ஆட்சியர் அருண் உத்தரவிட்டார்.