இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு வழங்கக்கூடிய 13ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்த, முயற்சி மேற்கொள்ளுமாறு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி அனுப்பியிருக்கும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்குரிய இந்திய வெளியுறவு கொள்கைகளை வகுப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கடந்த 1987-ம் வருடத்தில் இந்திய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனன் செயல்படுத்திய 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.
உள்நாட்டு போர் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்த பின்பும் தமிழ் மக்களுக்கான பகுதிகளில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை. இலங்கைத் தமிழர்கள் மீண்டும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். கிழக்கு, வடக்கு மாகாணங்களில் நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழ் மக்கள் பல சவால்களை சந்தித்து வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.