5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என கடந்த ஆண்டு 2019 செப்டம்பர் 13-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு திமுக பாமக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்தை கூறினர். ஒருசிலர் ஆதரவாக இருந்தாலும்,பெரும்பாலானோர் எதிர்ப்பையே தெரிவித்தனர். இதனால் மாணவர்களும் எங்கே நாம் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் அச்சத்தை போக்கும் விதமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுகிறது என்றும், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதற்ககு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் மீதான அழுத்தம், சுமை நீக்கப்பட்டுள்ளது. இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி!
5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் மீதான அழுத்தம், சுமை நீக்கப்பட்டுள்ளது. இது பாமகவுக்கு கிடைத்த வெற்றி!
— Dr S RAMADOSS (@drramadoss) February 4, 2020