ராஜ்நாத் சிங் முதல் பயணமாக நாளை சியாச்சின் பனிமலை பகுதிக்கு செல்கிறார்
மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்பட்டது. இதில் ராஜ்நாத் சிங்குக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து ராஜ்நாத்சிங் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் சேர்ந்து பாதுகாப்பு துணை இணை அமைச்சராக ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக்கும் பொறுப்பேற்று கொண்டார். இதில் பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, ராணுவத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ராஜ்நாத் சிங் தனது முதல் பயணமாக சியாச்சின் பனிமலைப்பகுதிக்கு நாளை செல்கிறார். இமயமலை தொடரின் ஒரு பகுதியாக இருக்கும் சியாச்சின் மலை பகுதி கடல் அடி மட்டத்தில் இருந்து சுமார் 21,000 அடி உயரம் கொண்டது. அங்கு சென்று அவர் இந்திய ராணுவ நடவடிக்கைகளை பார்வையிடுகிறார். இந்த பயணத்தின் போது, ராணுவத் தளபதி பிபின் ராவத்தும் உடன் செல்கிறார்.