ராகுல் திவேதியாவின் பேட்டிங்கை பார்த்துதான் நாங்கள் அவரை 4ஆவது இடத்தில் இறக்கி விட்டோம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்..
ஐபிஎல் தொடரில் நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியை யாருமே மறக்கமாட்டார்கள்.. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக ஆடினர்.. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 223 ரன்களை குவித்தது..
அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும், கேஎல் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.. மேலும் நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.. பின்னர் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.. இதில் சுமித் அருமையாக ஆடினார்.. ஆனால் காட்ரெல் பந்துவீச்சில் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்..
இதனையடுத்து கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் கைகோர்த்தனர்.. இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.. தங்களுக்கும் அதிரடியாக ஆட தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்களது அடி இருந்தது.. பவர் பிளேயில் அதிரடியாக ஆடி 60க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர்.. அதன்பின் சாம்சன் வழக்கம்போல சிக்ஸர்களை பறக்கவிட்டார்.. சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.. 4ஆவதாக இறங்கிய திவேதியா அதிரடியாக ஆட முடியாமல் திணறினார்..
ரசிகர்களோ இக்கட்டான நேரத்தில் இப்படி சொதப்பி கொண்டிருக்கிறாரே என்று கடுப்பாகி கிண்டல் செய்யும் நிலைமைக்கு ஆளானார்.. அணி வீரர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர்.. சஞ்சு சாம்சனும் அவர் மீது இருந்த நம்பிக்கையை இழந்து ஸ்ட்ரைக்கை அவரே தக்க வைக்க முயன்றார்.. ஏனென்றால் அவர் 19 பந்துகளில் 8 ரன்களே அடித்திருந்தார்.. அதாவது டெஸ்ட் போட்டி போன்று ஆடிக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து 17 வது ஓவரில் சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்.. சரி இனி ஆட்டம் முடிந்தது.. பஞ்சாப் வென்றுவிடும் என்று டிவியில் பார்த்துக்கொண்டிருந்த அனைவருமே நினைத்தனர்.. ஆட்டத்தில் பரபரப்பு நிறைந்தது.. இறுதியில் 18 பந்துகளில் வெற்றிக்கு 51 ரன்கள் தேவை.. அப்போது காட்ரெல் வீசிய 18-வது ஓவரை ராகுல் திவேதியா காற்றில் பறக்க வைத்தார்.. ஆம் , தொடர்ந்து 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 5ஆவது பந்தில் ரன் எடுக்காமல் பின் 6-ஆவது பந்தில் சிக்ஸர் அடித்து மொத்தம் 30 ரன்களை எடுத்தார்.. அதுமட்டுமில்லாமல் அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டமிழந்தார்.. ஸ்டேடியத்தில் மட்டும் ரசிகர்கள் இருந்திருந்தால் அரங்கமே அதிர்ந்திருக்கும்..
அணி வீரர்கள் உட்பட ரசிகர்கள் அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்.. தொடக்கத்தில் ஆமை வேகத்தில் ஆடிக்கொண்டு இருந்த அவர் பின்னர் சிறுத்தையாக சீறியது அந்த அணியினருக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது.. திவேதியா 31 பந்துகளில் 53 ரன்கள் (7 சிக்ஸர்) எடுத்தார்.. இதனால் ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சேசிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ராகுல் திவேதியாவை உத்தப்பாவிற்கு முன்பாக 4வது இடத்தில் இறக்கி விட்டார்கள் என்ற காரணத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பரிசளிப்பு விழாவின் போது தெரிவித்துள்ளார்.. அவர் பேசும்போத, நாங்கள் ராகுல் திவேதியாவின் ஹிட்டிங் பவரை வலைப்பயிற்சியின் போது நாங்கள் பார்த்துள்ளோம்.. மிகவும் நீண்ட தூரம் சிக்ஸர் அடிக்கின்ற திறமை அவரிடம் இருக்கிறது.. அதனால்தான் அவரை பேட்டிங் ஆர்டரில் சற்று முன்னே (4ஆவது இடத்தில்) அனுப்பி வைத்தோம்.. அதே போன்று அவரும் காட்ரெல் ஓவரில் 5 சிக்சர்களை அடித்து விளாச போட்டி மறுபடியும் எங்கள் பக்கம் திருப்பியது.. அதற்கு வெற்றியும் கிடைத்துவிட்டது என்று கூறினார்..