புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட 75 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு நேற்று முந்தினம் கோரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் 2-வது நாளாக இன்று சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி உட்பட அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடைபெற்றது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 648 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறியுள்ளார். இதனால் புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.