இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு ராமாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ரேஷன் கடை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு ரேஷன் கடையை திறந்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது இரண்டு மாதத்திற்கு உரிய பொருட்களை வழங்க வேண்டும் என பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை ஆய்வு செய்வதற்காக அந்த வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை பார்த்தவுடன் கலெக்டர் காரிலிருந்து இறங்கி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் ஏப்ரல், மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு இரண்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.