வெளியாட்களுக்கு நிலம் வழங்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் அப்பகுதியில் பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். இதனால் அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநபர்களுக்கு நிலம் வழங்க எமரால்டு சுரேந்தர் நகர் பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நிலத்தை சமன்படுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளி நபர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, வீடுகளை இழந்து முகாம்களில் தாங்கள் வசித்து வருவதாகவும், வீட்டு மனை பட்டா வழங்க கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாத நிலையில் வெளி நபர்களுக்கு இடம் வழங்க கூடாது என கூறியுள்ளனர். அதற்கு அதிகாரிகள் வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி வீடு இல்லாதவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தால் அதற்கு உரிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.