குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது பிள்ளையார் நகர் பகுதியில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கு மைதானம், சிறுவர் பூங்கா அல்லது வழிபாட்டு தளம் அமைக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முடிவு செய்து உள்ளனர். ஆனால் அப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்ததால் அங்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் மனு அனுப்பியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பணி துவங்கும் பொருட்டு அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்ள்ளனர்.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் குழி தோண்டப்பட்ட இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அந்த பகுதியில் ஏற்கனவே 2 மேல்நிலை தொட்டிகள் உள்ளன என்றும், ஆனால் பொது மக்களின் பயன்பாட்டில் ஒரு தொட்டி மட்டுமே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியை கைவிட்டு அந்த இடத்தில் சிறுவர் விளையாட்டு மைதானம், ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் அல்லது தொடக்கப்பள்ளி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதனை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.