பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில் நரேந்திரமோடியே மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பா.ஜ.க எம்.பிக்களின் பட்டியலை அளித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். அதன் படி குடியரசு தலைவரும் மோடியை ஆட்சியமைக்க வருமாறு அழைத்திருந்தார்.
இந்த நிலையில் வருகின்ற மே -30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கின்றனர். பதவியேற்பு விழா நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் அமைச்சர்களை தேர்வு செய்யும் பணிகளில் பிரதமர் மோடி மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.