ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியையடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள LG polymer தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவின் காரணமாக இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில்,
ஆங்காங்கே பொதுமக்கள் சாலையில் கொத்துக்கொத்தாக மயங்கி விழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 300 பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திராவில் விஷவாயு தாக்கி இறந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விஷவாயு தாக்கி தீவிர சிகிச்சையில் உள்ளவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.