Categories
மாநில செய்திகள்

வெளியான அதிரடி உத்தரவு…. நீதிமன்றம் இடைக்கால தடை… என்ன தெரியுமா..?

நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது. போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக் மற்றும் தீபா தாக்கல் செய்த வழக்குகளை நேற்று முன் தினம் விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, திட்டமிட்டபடி துவக்கவிழாவை நடத்திக் கொள்ளலாம் எனவும், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

மேலும் துவக்கவிழாவுக்கு பின் போயஸ்தோட்ட இல்ல சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கவும், பிரதான நுழைவாயிலை மட்டும் திறக்க வேண்டும், கட்டிடத்துக்குள் யாரும் நுழையக் கூடாது எனவும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக தீபா, தீபக்கை அறிவிக்கும் முன்னும், அறிவித்த பின்னும், வேதாநிலையத்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் கேட்கப்பட்டதாகவும், ஏற்கனவே இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தி கையகப்படுத்தியுள்ளதால் சாவியை அரசே வைத்திருப்பதால் மனுதாரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக் கொள்ளலாம் எனக் கூறி, சாவியை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தனர். அதேசமயம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு தொடரும் என்றும், வேதா நிலையத்தை அரசே தொடர்ந்து பராமரிக்கலாம் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு குறித்து தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழ்க்கு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Categories

Tech |