இலவச மனைப்பட்டா வழங்குமாறு பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பொண்ணடம் பகுதியில் இருக்கும் பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கருங்குழி தோப்பு பகுதியில் உள்ள இடத்தில் 25-ற்கும் அதிகமான குடும்பத்தினர் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தங்களுக்கு மின்சார வசதி பெறுவதற்காக மனை ரசீது கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கோவிலில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குமாறு ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பத்மநாபன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக குடியேறும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டவர்கள் திடீரென கிராம நிர்வாக அலுவலகத்தின் முன்பு அடுப்பு வைத்து சமையல் செய்யத் தொடங்கியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் சம்பத் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இவற்றில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 ஆண்கள் மற்றும் 34 பெண்கள் உள்பட 40 பேரை காவல்துறையினர் கைது செய்து அங்கிருந்த தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.