நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில், வணிக வளாகங்கள், மால்கள், தியேட்டர்கள், பார்க், டாஸ்மாக் என மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளனர். முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களை நிர்வகித்து வரும் யுஜிசி முக்கிய முடிவை அறிவித்துள்ளது. யுஜிசிக்கு கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இருந்த அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல விடைத்தாள் திருத்தும் பணிகள் இருந்தாலும் அதையும் மார்ச் 31 வரை ஒத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.