குடிநீர் சீராக வினியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மாநகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இதில் குடிநீர் சரியாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது வழக்கம். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள். இந்நிலையில் போஸ் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கப்படாததை கண்டித்தும், குடிநீர் வசதி சீராக வழங்க கோரியும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் சிலர் காலிக்குடங்களுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.