உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன இளைஞர் ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறி இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யஸ்ரீ.. இவர் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.. நித்யஸ்ரீயின் சகோதரிகள் இருவரும் பள்ளியில் படித்துவருகின்றனர்.
இந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக தந்தை ஆறுமுகம் 3 மகள்களின் ஆன்லைன் வகுப்புக்காக ஒரே ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி கொடுத்து படிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 3 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டது.. இதனால் மூவரில் ஒருவர்தான் ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்க முடிந்தது.
ஒருவர் ஸ்மார்ட்போனை படிக்க பயன்படுத்தும்போது மற்ற இருவரும் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், மிகுந்த மனமுடைந்த நித்யஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்நிலையில் ஆத்தூரில் வசித்து வரும் ராமு என்ற இளைஞர் இறந்த மாணவி நித்யஸ்ரீயை ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாகக் சொல்லப்படுகிறது.. மாணவி நித்யஸ்ரீ இறந்தவுடன் சடலம் மயானத்தில் எரிக்கப்பட்டது. இதனையறிந்து மயான கொட்டகைக்கு வந்த இளைஞர் ராமு, நித்யஸ்ரீ சடலம் எரிந்துகொண்டிருந்த நிலையில், அதே தீயில் குதித்து தன்னைத்தானே எரித்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே காலையில் வெளியே சென்ற ராமு மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், திருநாவலூர் போலீஸ் ஸ்டேஷனில் அவரது தந்தை புகாரளித்தார்.. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தடயவியல் வல்லுநர்களை வரவழைத்து மயானத்தில் எரிந்து கிடந்த எலும்புகளை சேகரித்து சோதனையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.