பாஜகவில் இணைய வந்ததாக ஆயுதங்களுடன் வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி பகுதியில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, மளிகை பொருட்கள் போன்ற நிவாரணம் பொருள்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நோக்கில் சிலர் சுற்றி வருவதை பார்த்த போலீஸ் அவர்களை சுற்றி வளைத்து அவர்களின் வாகனங்களை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் பெரிய பெரிய ஆயுதங்களுடன் அவர்கள் வந்திருப்பது தெரிய வந்தது.
உடனே அந்த நபர்கள் அனைவரையும் ஓட்டேரி போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. ரவுடி சூரியா தப்பிவிட மற்றவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்கள் போலிசாரிடம், “நாங்கள் பாஜக கட்சியில் சேர வந்தோம். நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் போலீசார் இருந்ததால் பயத்தினால் அங்கு செல்லவில்லை” என்று கூறியுள்ளனர்.
போலிசாரிடம் சிக்கிய ஆறு ரவுடிகள் மீதும் ஏதாவது வழக்குகள் போடப்பட்டிருக்கிறதா? என்று அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். பாஜக கட்சியில் இணைய வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துவிட்டதாக காவல் நிலையம் முன்பு பாஜக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.