Categories
மாநில செய்திகள்

காவல்துறையினர், சுகாதார பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்க உத்தரவு!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு சதிக்காக மட்டுமே என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க தமிழக சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு மருந்தினை கொடுக்க தமிழக சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி 180 மி.கி, வைட்டமின் சி, மல்டி வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |